உயிரியல் ஆயுதம் போன்றது கொரோனா -கட்டுப்படுத்தவே இராணுவம் களமிறக்கம் - வெளிவந்தது அறிவிப்பு
கொடிய கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்துவதற்கான காரணத்தை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன வெளியிட்டுள்ளார்.
அணு உயிரியல் மற்றும் இரசாயனப் போரை கையாள்வது இராணுவத்தின் ஒரு பகுதியாகும். அணு உயிரியல் மற்றும் இரசாயன அச்சுறுத்தல்களில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கும் பக்க விளைவுகளைத் தடுப்பதற்கும் எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டியது இராணுவத்தின் கடமையாகும்.
கொரோனா வைரஸை "உயிரியல் போருக்கு பயன்படுத்தும்” ஒரு வைரஸாகவே இலங்கை கருதுகிறது. கொரோனா தொற்றினால் 10,000ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஏற்கனவே தங்கள் உயிரை இழந்துள்ள நிலையில், நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராணுவத்தின் பங்கை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன மற்றும் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் சடலங்களை புதைக்கும் பட்சத்தில் எதிர்ப்பாளர்கள் அந்த உடல்களை ஒரு உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என கருத்துகள் வெளியாகியிருந்தது.