பாகிஸ்தானுக்கான ஆப்கான் தூதுவரின் மகள் கடத்தப்பட்டு கடும் சித்திரவதை
பாகிஸ்தானுக்கான ஆப்கன் தூதுவர் நஜ்புல்லா அலிகேலின் மகள், இஸ்லாமாபாத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
27 வயதான சில்சிலா அலிகேல், டாக்சி ஒன்றில், கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தின் வர்த்தக பகுதியான புளூ ஏரியாவில், தனது தம்பிக்கு பரிசுப்பொருள் வாங்க சென்றார்.
அதன்பின்னர் வாடகை வாகனத்தில் அவர் வீட்டுக்கு திரும்பிய போது வேறொரு நபர் சாரதியின் அனுமதியுடன் அந்த வாகனத்தில் அத்துமீறி ஏறி சில்சிலாவை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்டதால் மயக்கமடைந்த சில்சிலா நினைவு திரும்பியதும் தாம் வீதி ஒன்றில் கிடப்பதை உணர்ந்து, ஹிக்மத் என்ற நபருக்கு தகவல் அளித்து தூதரக வாகனத்தில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் சில்சிலாவின் சப்பாத்துக்களும்,கைபேசியும் காணாமால் போய் விட்டதாகவும், அவரது காலில் ஆண்கள் அணியும் சப்பாத்து காணப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சில்சிலாவின் துப்பட்டாவில் 50 ரூபாய் தாள் பின் செய்யப்பட்டு, அடுத்த குறி தூதுவர் என்றும் அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்றும் எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஆப்கன் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.