குழந்தைகளின் உயிரைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை: ஜனாதிபதி
குழந்தைகள் நாட்டின் சொத்துக்கள் என்பதால், அவர்களின் உயிரைப் பாதுகாப்பது பொறுப்பான அரசின் முக்கிய கடமை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் விவகார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘திவியட்ட சவியக்’ வீட்டுத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் நேற்று (17.09.2026) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் வளர்ந்து 18 வயதை பூர்த்தி செய்த பின்னர் சமூகமயமாகும் இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பற்ற, அதிக ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான வீடுகளை அமைப்பதற்காக தலா 20 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க
இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

குழந்தைகள் எந்தச் சூழலில் வளர்ந்தாலும் அவர்கள் நாட்டின் குழந்தைகள் என்பதால், அவர்களின் பாதுகாப்பான மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக அரசாங்கம், சமூகம் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எந்தவொரு குழந்தையும் பாதுகாப்பற்ற நிலையில் அல்லது அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வளரக்கூடாது எனத் தெரிவித்த அவர், ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளதாகவும் கூறினார்.
சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலிருந்து சமூகமயமாகும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கான வங்கிக் கணக்குகளைத் திறந்து ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் சேமிப்பாக வைப்பதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
20 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பு
அத்துடன், 18 வயதை பூர்த்தி செய்து சமூகமயமாகும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த ஆண்டு பாதுகாப்பான வீடொன்றை அமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும், அந்தத் தொகை போதுமானதாக இல்லை என முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்திற்கொண்டு இந்த ஆண்டு அந்த உதவித் தொகை 20 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தத் தொகையும் போதுமானதாக இல்லாவிட்டால், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக மேலும் நிதி ஒதுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தால் மாத்திரம் மேற்கொள்ளக்கூடிய பணியல்ல எனக் குறிப்பிட்ட அவர், அதற்காக சமூகமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
எந்தவொரு குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேசிய ரீதியில் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக அரசாங்கமும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |