பண அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊடகங்கள் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றன - எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
நாட்டில் தற்போது காணப்படுகின்ற சில ஊடகங்கள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுகின்ற திசை திருப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
முதலாளித்துவ தனவாத சிந்தனையுடன் செயற்படுகின்றவர்கள் தனது பண அதிகாரத்தையும் வேறு அதிகாரங்களையும் பயன்படுத்தி ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்வதோடு நாட்டிலுள்ள 220 இலட்சம் பேரையும் தவறான வழியில் நடாத்திக்கொண்டிருப்பதாகவும் அசலர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் வெளியிடப்பட்ட சிங்கள மொழியிலான “பலவேகய” மற்றும் தமிழ் மொழியிலான “ஐக்கிய குரல்”பத்திரிகையின் மின்னிதழ் அதனோடினைந்த ஒன்றித்த இணையதள அங்குர்பண நிகழ்வில் நேரலையாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாக மக்களுக்கு பொய்யான செய்திகளை வெளியிட்டு அவற்றை உண்மைப்படுத்த முற்படுகின்ற சக்திகளின் தன்மையை வெளிப்டுத்தி மக்களுக்கு உண்மையை வெளிக்கொணர்வதற்காக பலவேகய மற்றும் ஐக்கிய குரல் ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன.
ஒவ்வொரு பிரதேசத்திலும் கீழ்மட்டத்திலிருந்து ஊடக வலையமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் இந்த நாட்டில் காணப்படுகின்ற சம்பிரதாய ஊடக வழிமுறைகளுக்கு அப்பால் சென்ற மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துகின்ற, நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தாக, பொய்யை உருவாக்காத உண்மையையையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்ட தகவல் பறிமாற்ற வலையமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
குறுகிய காலத்தில் பாரிய அரசியல் கட்சியாக மாற்றம் பெற்று நாட்டிற்குள் புரட்சிகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்ற தற்போதைய நிலையில் மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துகின்ற மாற்றுத்திட்ட அரசாங்கமாக இருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தொண்டர்களுக்கு கட்சி உறுப்பினர்களுக்கும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலே இந்த பத்திரிகை வெளியிடப்படுள்ளது.
அதேவேளை இந்தப் பத்திரிகையின் உருவாக்கத்திற்கு முன்னின்று செயற்பட்ட கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் உள்ளிட்ட பத்திரிகைக் குழுவிற்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டதோடு முழு இலங்கையிலும் அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கி ஊடக பிரதிநிதிகள் இணைத்துக்கொண்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற மக்களை முன்னிறுத்திய பயணத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய நகர்வொன்று இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
அந்த நகர்விற்கான தொடக்கப்புள்ளியை இட்ட இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு இவ்வேளையில் நன்றி கூறவிரும்புகின்றேன்.
அவருடைய அரசியல் வரலாற்றை எடுத்துநோக்குகையில் வீடமைப்புத் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் முன்நின்று செயற்பட்டார்.
அதேபோன்று தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் 'பலவேகய' மற்றும் 'ஐக்கிய குரல்' ஆகிய பத்திரிகைகளை வடிவமைப்பதிலும் அவரது சிறப்பானதும் அர்ப்பணிப்பானதுமான தலைமைத்துவத்தினை வழங்கியிருக்கின்றார்.
பகுத்தறிவை மையப்படுத்திய ஓர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அதற்கு இப்பத்திரிகை முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று நம்புகின்றோம்.
சில தரப்பினர் பொய்யான தகவல்களைக்கூறி மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் நாம் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
மாறாக இந்த ஆரம்பகட்ட முயற்சியுடன் இணைந்ததாக கிராமிய மட்டங்கள்தோறும் சரியான தகவல்களை வழங்கக்கூடிய ஊடகக்கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
அத்தோடு எமது நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் ஒன்பது மாகாணங்களிலும் 25 மாவட்டங்களிலும் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள அனைவர் மத்தியிலும் பலவேகய மற்றும் ஐக்கிய குரல் ஊடகப் புரட்சி சென்றடைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.