வெளிநாடுகளில் உள்ள ஆப்கான் தூதுவர்களின் அவலநிலை
வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரக அலுவலக நடவடிக்கைகளுக்கு பணம் இல்லாமல், அதிகாரிகள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் உள்ள ஆப்கன் அரசின் தூதுவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தானின் தூதுவர்கள் தங்களது அலுவலக நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என தலிபான்கள் அறிவித்த நிலையிலும் ஆப்கன் தூதர்கள் புதிய சிக்கலில் சிக்கியுள்ளனர்.
தூதரக அலுவல் மற்றும் தங்களது சொந்த பணிகளுக்கு பணம் இல்லாததால் அதிகாரிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது குடும்பத்தினரை மீட்கவும் முடியாமலும், வெளிநாடுகளில் பணிகளைத் தொடர முடியாமலும் உள்ள தூதரக அதிகாரிகள் அகதிகளாக தங்களை அங்கீகரிக்கக் கோரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தூதரக அதிகாரிகளின் இந்த முயற்சியை தலிபான்கள் அறிந்தால் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் தங்களது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் நேரலாம் என்பதால் தங்களது பெயர்களையும் வெளியிட அஞ்சுவதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.