தேசியத் தலைவர் உட்பட மூத்த தளபதிகள் மற்றும் போராளிகள் தங்குவதற்கு தனது வீட்டைக்கொடுத்த கவிஞர்!!
கவிஞர் புலமைப்பித்தன் மறைவால் ஒரு தமிழினப் போராளியை இழந்து தவிக்கிறது தமிழ் உலகம் ' இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தமிழ்த் தேசிய இனப்பற்றாளர் கவிஞர் புலமைப்பித்தன்' என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 'தமிழீழ மக்களின் விடுதலைப் பணிகளில் பக்க பலமாக நின்று ஓயாது ஒலித்த ஒரு உரிமை குரல் இன்று அடங்கி விட்டது. தமிழீழ மக்களுக்கு உணர்வூட்டும் பல தமிழீழ எழுச்சிப் பாடல்களையும் எழுதிய பாவலர் திரு.புலமைப்பித்தன் ஐயா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக 08.09.2021 அன்று இயற்கை எய்தினார்.
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது அளவுகடந்த அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் கொண்டவர். தேசியத் தலைவர் உட்பட மூத்த தளபதிகள் மற்றும் போராளிகள் பலரும் இவரின் வீட்டில் தங்கி விடுதலைப் பணி புரிந்திருக்கிறார்கள். இதனால்தான் விடுதலைப் புலிப் போராளிகளாலும், தமிழீழ மக்களாலும் பெரிதும் போற்றப்படுகின்றார்' - என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


