பீனிக்ஸ் பறவைபோல் ராஜபக்சாக்கள் மீண்டெழுவர் - விடுக்கப்பட்ட சூளுரை
பீனிக்ஸ் பறவைபோல்
சாம்பல் மேட்டிலிருந்து மீண்டெழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவைபோல் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும், ராஜபக்சாக்களும் மீண்டெழுவார்களென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எதிரிமான்ன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தெரிவித்தனர்.
“ஒன்றிணைந்து எழுவோம், களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்”எனும் தொனிப்பொருளின் கீழ் களுத்துறையிலுள்ள ரோஹித்த அபேகுணவர்த்தனவின் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே அவர்கள் இருவரும் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பின்னடைவுக்கு கோட்டாபயவும் காரணம்
மஹிந்த ராஜபக்ச தலைமையில் மொட்டுக் கட்சி ஆட்சி தொடரும். தேவையான நேரங்களில் உரிய அஸ்திரங்கள் பயன்படுத்தப்படும்.
அத்துடன், மொட்டுக் கட்சி ஆட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி உருவாவதற்கு விமல், கம்மன்பில, டலஸ் போன்ற உள்ளகச் சதிகாரர்களும் பிரதான பங்கை வகித்தனரென விமர்சனங்கள் இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன், இரசாயன உரப் பாவனைக்கு தடை விதிப்பதற்கு கோட்டாபய ராஜபக்ச எடுத்த முடிவும் பின்னடைவுக்குக் காரணமெனவும் சுட்டிக்காட்டினர்.
மே 09 ஆம் திகதி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள் பொதுவெளியில் ஒரே மேடையில் கூடியது இதுவே முதன்முறையாகும்.
