தனியறையில் பரீட்சையை எழுதிய நாமலுக்கு என்ன தெரியும்! சபையில் ஆளும் தரப்பு கிண்டல்
தந்தைக்கும், சித்தப்பாவுக்கும் ஏற்றாட்போல் தீர்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கப்பட்டதை நாமல் ராஜபக்ச அறியாமல் இருப்பது வேடிக்கையாகவுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “தனியறையில் இருந்து சட்டக்கல்லூரி இறுதி பரீட்சையை எழுதிய நாமல் ராஜபக்ச முதலில் சட்ட ஏற்பாடுகளை தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் சட்ட ரீதியிலான தர்க்கங்களை முன்வைக்க வேண்டும்.
ராஜபக்சர்களுக்கு தெரிந்த சட்டம்
துர்நடத்தை குற்றவாளியான காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவதற்கு 2002 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க அலுவலர்களை அகற்றும் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அது சட்டவிரோதமானது, நாடாளுமன்ற நிலையியல் கட்டளை மீறப்பட்டுள்ளது என்று நாமல் குறிப்பிடுகிறார்.
தந்தை மற்றும் சித்தப்பாவுக்கு ஏற்றாட் போல் தீர்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கப்பட்டதை நாமல் அறியாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது.
ராஜபக்சர்களுக்கு எவ்வாறு சட்டத்தை செயற்படுத்தினார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
