வெளிநாட்டில் திருட்டு -இலங்கையருக்கு ஏற்பட்ட நிலை
வியட்நாமில் இலங்கையர் ஒருவர் பணம் திருட்டு குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த 42 வயதான அருண ருக்சான் ராஜபக்சகே என்பவர் மீதே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2020 மார்ச் 1ஆம் திகதி குறித்த இலங்கையர் ஹோ சி மின் நகரில் உள்ள 'டான் சோன் நாட்' சர்வதேச விமான நிலையம் வழியாக வியட்நாம் நாட்டிற்குள் நுழைந்துள்ளார்.
தொழில் கிடைக்காத காரணத்தினால்
அவர் வேலை தேடுவதற்காக வியட்நாமில் உள்ள பல இடங்களுக்குச் சென்றார். தொழில் கிடைக்காத காரணத்தினால் கடந்த 2022 ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி, ஹனோயின் ஹோன் கீம் மாவட்டத்தின் வீதிகளில் மற்றவர்களின் சொத்துக்களை திருடும் நோக்கத்துடன் சுற்றித் திரிந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று இரவு 8.00 மணியளவில் உணவகம் ஒன்றுக்குள் புகுந்து 13 மில்லியன் பெறுமதியான வியட்நாம் டோங் (545 அமெரிக்க டொலர்) பணம் அடங்கிய கறுப்பு கைப்பையை திருடி தப்பியோடியுள்ளார்.
காவல்துறையிடம் ஒப்படைப்பு
கைப்பை திருடப்பட்டதை அறிந்ததும், உணவகத்தின் ஊழியரான பையின் உரிமையாளர் நுயென் டியூ லின் உடனடியாக உதவிக்காக கூச்சலிட்டார். பின்னர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இலங்கை நபர் கைது செய்யப்பட்டு லை தாய் டு வார்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும் குறித்த கைப்பை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
