பிணை செலுத்தவோ அபராதம் செலுத்தவோ பணம் இல்லை : 3000 கைதிகள் சிறையில் தடுத்து வைப்பு
பிணைப் பணம் செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமலும் 3,371 கைதிகள் பல ஆண்டுகளாகச் சிறைகளில் வீணாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அண்மைய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சிறைச்சாலை அமைப்பில் நிலவும் அதிக நெரிசலுக்கு இந்த நிலைமையும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அபராதம்,பிணைப்பணம் செலுத்தமுடியாதவர்கள்
சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, அபராதம் செலுத்த முடியாமல் 28 சிறைகளில் 1,940 கைதிகள் உள்ளனர், மேலும் பிணைப் பணம் செலுத்த முடியாமல் 21 சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 1,431 ஆகும்.

இவ்வாறு விடுதலை செய்ய முடியாமல் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகும் நபர்கள் சிறைச்சாலை போராட்டங்களுக்கு தலைமை தாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவு மற்றும் வசதிகளுக்காக பெரும் தொகை செலவு
இவ்வாறு வீணாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உணவு மற்றும் வசதிகளுக்காக அரசு ஆண்டுதோறும் பெரும் தொகையைச் செலவிட வேண்டியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பிணை வழங்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 325 ஆகும், கடந்த ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 21 சிறைச்சாலை நிறுவனங்களில் இந்த நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பு
நிதி வசதியின்மை, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமை மற்றும் உறவினர்கள் பிணை வழங்க முன்வராமை ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்கள் என கணக்காய்வு விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான கைதிகள் மீது விசேட கவனம் செலுத்தி அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |