மின்வெட்டிலிருந்து தப்பவே முடியாது -துறைசார் நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை
எவ்வளவு அந்நியச் செலாவணி கிடைத்தாலும் இவ்வருடத்தில் மின்வெட்டிலிருந்து தப்ப முடியாது என்றும், நாட்டின் மின்சார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்றும் எரிசக்தி துறை நிபுணர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய(Dr. Thilak Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் தேசிய மின் உற்பத்தி நிலையத்துடன் புதிய மின் உற்பத்தி நிலையம் எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும், சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி கைவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கூரையில் சோலார் பனல்களை நிறுவுவதன் மூலம் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாது என சுட்டிக்காட்டிய கலாநிதி சியம்பலாபிட்டிய, தேவைப்பட்டால் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது குறித்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
சரியான தீர்மானங்கள் இன்று அமுல்படுத்தப்பட்டால் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு 2026ஆம் ஆண்டு தீர்வு காணப்படும் என கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய இந்தக் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.