மக்கள் எழுச்சி மூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும் - திகாம்பரம் தெரிவிப்பு
மக்கள் எழுச்சி மூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் (Palani Digambaran) தெரிவித்தார்.
பொகவந்தலாவையில் இன்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் உரையாற்றிய அவர்,
“நாட்டு மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனால் தான் மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். மக்கள் போராட்டங்கள் மூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும். அடுத்து வரும் தேர்தலில் சஜித் தலைமையில் மக்களுக்கு நன்மை பயக்கும் அரசொன்றை நாம் உருவாக்குவோம்.
பொய்யுரைத்து அதன்மூலம் ஆட்சியை முன்னெடுப்பதற்கே இந்த அரசு முயற்சிக்கின்றது. இன்று பொய் கூறுவதில் சிறப்பு தேர்ச்சியும் பெற்றுள்ளது.
இவர்கள் கூறுவது போன்று, சேதனப் பசளைத் திட்டத்தை ஒரே நாளில் செயற்படுத்திவிட முடியாது. அதற்கு நீண்டகாலத் திட்டம் வேண்டும்.
ஒரே தடவையில் இதனைச் செய்வதற்கு முற்பட்டதால் தான் இன்று விவசாயிகள் போராடுகின்றனர். இதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, விவசாயிகளுக்கு உடனடியாக உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.