தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் எந்தவித இடையூறும் கொடுக்காது அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாக ஒரு மக்கள் புரட்சியை இந்த மண்ணிலே உருவாக்க வேண்டும் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரமுகர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், திலீபன் அண்ணனுடைய 39வது நினைவு நாளை நாங்கள் அண்மித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையிலே 1987ஆம் ஆண்டு திலீபன் அண்ணன் மேற்கொண்ட இந்த அகிம்சை வழி போராட்டத்திலே அவர் தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம்
எமது விடுதலைப் போராட்டம் இந்த மண்ணிலே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலே அமைதிப் படையாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் எமது தாயக நிலப்பரப்புக்கு இந்திய இராணுவம் வந்தது. அந்தக் காலப்பகுதியிலே தான் எங்களுக்கு ஒரு மிக மோசமான நிலைமை ஏற்பட்டது.
அமைதி காக்க வந்த அந்த இந்திய இராணுவத்தினர் மாறாக அடக்குமுறைகளை இங்கே எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டபோதுதான் திலீபன் அண்ணன் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தனது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
12 நாட்கள் உணவின்றி, நீரின்றி அவருடைய போராட்டம் தொடர்ந்தது. திலீபன் அண்ணனுடைய வீர வரலாறுகள் தொடர்ச்சியாக இங்கே மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையை நாங்கள் காண்கின்றோம்.

இந்த விடயங்கள் அனைத்துமே நாங்கள் இந்திய அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கவில்லை. எமது விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான வரலாற்றின் ஒரு பகுதி. அந்த பகுதியை எதிர்கால சந்ததியினருக்கு நாங்கள் கொண்டு செல்ல வேண்டும், அவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அவர்கள் தான் எதிர்காலத்தில் இந்த மண்ணை ஆளப்போகின்றார்கள். அவர்களுக்கு அந்த விடயங்கள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த கருத்துக்களை இந்த இடத்தில் முன்வைக்கின்றோம்.
எதிர்வருகின்ற 39வது நினைவு நாளை கட்சி பேதமின்றி நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, பெரும் எழுச்சியோடு நாங்கள் நினைவு கூர வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கின்றது.
அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர்
ஏனென்றால் இந்த வரலாற்று நிகழ்வுகள் என்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள், ஒரு அரசியல் நோக்கங்களுக்காக செய்ய முடியாது. நாங்கள் அதனை அனுமதிக்கவும் முடியாது.
இன்றைக்கு பார்க்கப்போனால் தொடர்ச்சியாக ஒரு அரசியல் கட்சிகளுடைய தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக இந்த போராளிகளுடைய நினைவு நாட்களை நினைவு கூருவது இங்கே காணக்கூடியதாக இருக்கின்றது.

மாவீரர் துயிலுமில்லங்களாக இருந்தாலும் சரி, போராளிகளுடைய வீரமரணம் அடைந்த எமது மாவீரர்களுடைய நினைவாலயங்கள் இருந்தாலும் சரி, அந்த நினைவு நாட்கள் என்பது அரசியல் சார்ந்த விடயங்களாகவே இங்கே நினைவு கூரப்படுவதை அதிகமாக எங்களால் பார்க்கக்கூடியவாறு இருக்கின்றது.
இந்த மாவீரர் துயிலுமில்லங்கள் கூட அப்படித்தான் இங்கே நினைவு கூரப்படுகின்றது. கிளிநொச்சியில் ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர்கள் அதை ஆக்கிரமித்து நினைவு கூருகின்றனர். முல்லைத்தீவில் அப்படி செய்கிறார்கள், யாழ்ப்பாணத்திலேயும் அப்படிதான்.
திலீபன் அண்ணனுடைய நினைவு நாளை நினைவு கூருவது ஒரு அரசியல் கட்சி. நினைவு கூரல்களை கட்சிகள் தங்களுடைய அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றது.
குறுகிய மக்கள் கூட்டம் தான் அந்த நினைவேந்தலுக்குச் செல்கின்றார்கள். என்ன நடந்தது, அவருடைய வரலாறு என்ன, எதற்காக அவர் மரணித்தார், அந்த விடயங்கள் எதுவுமே இளைய சமூகத்தினருக்கு கடத்தப்படுவதில்லை.
திலீபன் அண்ணனுடைய வீரமரணம் என்பது ஒரு இலட்சியத்துக்காக, மக்கள் சுதந்திரமடைய வேண்டும் என்பதற்காகவே அவருடைய வீரமரணம் இங்கே நிகழ்ந்தது.
இராணுவத்தினர் ஆக்கிரமித்த துயிலுமில்லங்கள்
அதை வைத்து இந்த கட்சிகள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவோ அல்லது அவர்கள் அந்த தியாகங்களை பயன்படுத்தி அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவோ அவருடைய வீரமரணம் இங்கே நிகழவில்லை.
தயவு செய்து அனைத்து அரசியல் கட்சிகளும் எந்தவிதமான இடையூறுகளும் கொடுக்காது, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுமக்களும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாக ஒரு மக்கள் புரட்சியை இந்த மண்ணிலே உருவாக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கம்.

அந்த நோக்கத்துக்காகவே நீங்கள் வந்து அவருடைய நினைவு நாட்களை ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மாவீரர்களுடைய நினைவாலயங்கள், துயிலுமில்லங்களை இராணுவத்தினர் அதை கைப்பற்றி வைத்திருக்கிறார்கள்.
சில இடங்களில் அதை இராணுவத்தினர் அதை உடைத்திருக்கிறார்கள். இராணுவத்தினர் ஆக்கிரமித்த இந்த துயிலுமில்லங்களை விடுதலை செய்ய வேண்டும், மாவீரருடைய நினைவாலயங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற, நீங்களும் அதை ஆக்கிரமித்து தான் வைத்திருக்கிறீர்கள்.
ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கொள்கையோடு இன்றைக்கு இருக்கிறீர்கள். நீங்கள் அந்த ஒரு கொள்கைக்காக, இந்த நாட்டின் விடுதலைக்காக வீரமரணம் அடைந்த அந்த மாவீரர்கள் அவர்களும் ஒரு கொள்கைக்காகத்தான் அங்கே வீரமரணம் அடைந்தார்கள்.
நீங்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கொள்கையில வைத்துக்கொண்டு ஒவ்வொரு துயிலுமில்லங்களை உங்களுடைய உங்களுடைய நோக்கங்களுக்காக ஆக்கிரமித்து வைத்து, அதை பிடித்து வைத்துக்கொண்டு உங்களுடைய அரசியல் வேலை செய்வது மிகவும் ஒரு கீழ்த்தரமான வேலை.
அதனை யாரும் செய்யாதீர்கள், அதை சுதந்திரமாக விடுங்கள். ஏனென்றால் மக்கள் அதை சிறப்பாக செய்வார்கள். அதை வழிநடத்துவதற்கும் மாவீரர் பணிச்செயலகம் போன்ற கட்டமைப்புகள் இருக்கின்றது. அவர்கள் அதை செய்வார்கள்.
நீங்கள் அதில் வந்து உங்களுடைய அரசியலை தேவைக்காக அந்த தியாகங்களை கொச்சைப்படுத்தாதீர்கள். அது எதிர்காலத்தில் அது உங்களுக்கு நல்லது இல்லை. ஒன்றுபட்டு செயற்படுங்கள்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 1 நாள் முன்