சந்தேகத்திற்கிடமான ஆயிரக்கணக்கானோர் கொழும்பில் நடமாட்டம்!!
கொழும்பு நகர எல்லையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான தற்காலிக குடியிருப்பாளர்கள் தங்கியிருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் காவல்துறையினர் ஆராய்வதாகவும் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
காவல்துறை மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதுடன், இதற்கமைய சுமார் இரண்டாயிரத்து 746 சந்தேகத்திற்கிடமான தற்காலிக குடியிருப்பாளர்கள் கொழும்பு நகர எல்லையில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
கொழும்பிற்குள் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள், அரச அல்லது தனியார் வளாகங்கள், கட்டுமானப் பணிகள் போன்றவற்றில் வசிக்கும் அனைத்து தற்காலிக குடியிருப்பாளர்களின் தகவல் சேகரிப்பதற்காக மேல் மாகாண சமூக காவல்துறை பிரிவு ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் மூன்று நாள் நடவடிக்கையை மேற்கொண்டது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் கொழும்பில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கமைய குடியிருப்போர் மற்றும் நிறுவனங்களின் தகவல்களை சேகரிக்க 600இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது அப்பகுதியில் தற்காலிகமாக வசிப்பவர்கள் குறித்த சரியான தகவல்களை உள்ளீடு செய்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடமோ அல்லது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ பொதுமக்கள் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது மேல்மாகாணத்திற்கு வெளியே நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட தற்போது கொழும்பு நகரில் வசிக்கும் ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 126 தற்காலிக குடியிருப்பாளர்களின் தகவல்களை அதிகாரிகள் சேகரித்ததாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இரண்டாயிரத்து 746 குடியிருப்பாளர்களில் ஆயிரத்து 852 ஆண்கள் மற்றும் 894 பெண்கள் துல்லியமான தகவல்களை வழங்கத் தவறியுள்ளனர்.
மேலும், அதிகாரிகள் 26 ஆயிரத்து 747 வீடுகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள், அரச அல்லது தனியார் வளாகங்கள் மற்றும் கட்டுமான தளங்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான தற்காலிக குடியிருப்பாளர்களின் அடையாளங்களை அந்தந்த காவல் நிலையங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மீண்டும் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.