மகிந்தவின் உயிருக்கு ஆபத்து! முழுப்பொறுப்பும் அரசாங்கமே என அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவரது ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போது, எவ்வித உடற்பரிசோதனைக்கும் உட்படாத பெருமளவிலான மக்கள் அவரைச் சூழ்ந்திருந்ததாகவும், அந்த கூட்டத்திற்குள் ஒரு பயங்கரவாதி ஊடுருவி மகிந்த ராஜபக்சவிற்கு ஏதேனும் தீங்கு விளைவித்திருக்கக்கூடிய சாத்தியம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பாதுகாப்பற்ற ஒரு சூழலிலேயே அவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்று மனோஜ் கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்புப் பிரிவினரின் எண்ணிக்கை
விடுதலைப் புலிகள் அமைப்பு தங்களின் மாவீரர் தினத்தை நினைவுகூரும் இவ்வாறானதொரு காலகட்டத்தில், சில குழுக்கள் முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க முயற்சி செய்யலாம் என்பதால் அரசாங்கம் இது குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்புப் பிரிவினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமையையும் அவர் இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும், அண்மைக்காலமாக பதிவாகிவரும் சந்தேகத்திற்கிடமான மரணங்களுக்கு மத்தியில், தனது சொந்த பாதுகாப்பு குறித்தும் அச்சநிலை தோன்றியுள்ளதாக மனோஜ் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |