பொரளையில் போலி ஆவணத் தயாரிப்பு நிலையம் முற்றுகை: 3 பேர் கைது
கொழும்பில் போலி ஆவணங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளைத் தயாரித்து வந்த இரகசிய மத்திய நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
பொரளை பகுதியில் இயங்கிய மத்திய நிலையம் ஒன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இதில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான போலி ஆவணங்கள் மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொரளை, என். எம். பெரேரா மாவத்தையில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, நீண்டகாலமாக இந்த போலி ஆவணத் தயாரிப்பு மத்திய நிலையம் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, 600 போலி உத்தியோகபூர்வ இலச்சினைகள், காணிப் பதிவு அலுவலகத்தின் முத்திரையிடப்பட்ட பிரதிகள் அடங்கிய இரண்டு அசல் கோப்புகள், நான்கு போலி தேசிய அடையாள அட்டைகள், போலி ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மின்னணு உபகரணங்கள் மற்றும் தட்டச்சு இயந்திரம் ஒன்று, ஒரு சிற்றூந்து (Car) மற்றும் ஒரு உந்துருளி (Motorbike), 1.5 மில்லியன் ரூபா பணம் ஆகியன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
காவல்துறையினரின் கூற்றுப்படி, கைப்பற்றப்பட்ட இலச்சினைகளுள் முக்கிய அரச திணைக்களங்கள், சமாதான நீதவான்கள், சான்றுறுதியாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளின் போலி இலச்சினைகளும் அடங்குகின்றன.
காவல்துறையினர் முற்றுகை
குறித்த இடத்தைக் காவல்துறையினர் முற்றுகையிட்ட போது அங்கிருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் வெளிவந்த தகவலின் அடிப்படையில், நுகேகொட, தெல்கந்த பகுதியில் வைத்து மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் 54, 55 மற்றும் 59 வயதுடைய பொரளை, திக்வெல்ல மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |