அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்ற அமைச்சர்கள் - வெளிவருமா அந்தரங்க தகவல்கள்?
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara), விமல் வீரவன்ச(Wimal Weerawansa) மற்றும் உதய கம்மன்பில(Udaya Gammanpila) ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனியான சட்டத்தரணிகள் குழு முன்னிலையில் வாதிட தீர்மானித்துள்ளனர்.
பங்குகளை மாற்றும் அரசின் முடிவை எதிர்த்து 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மனுக்களை வரும் 26ம் திகதி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு முன் இந்த ஐந்து மனுக்களையும் பரிசீலிக்குமாறு சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். இந்த மனுக்கள் சார்பில் அமைச்சரவையை சட்டமா அதிபர் பிரதிநிதித்துவப்படுத்துவார், மேலும் இந்த மூன்று அமைச்சரவை உறுப்பினர்களும் தனியான சட்டத்தரணிகள் குழுவின் ஊடாக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (17) இரவு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதுடன், தனியான சட்டத்தரணிகள் குழுவின் ஊடாக இந்த மனுக்களை பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட விதம் கேள்விக்குரியது எனவும் நீதிமன்றில் தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டது.
40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச உதய கம்மன்பில ஆகியோர் அண்மையில் மக்கள் சந்திப்பொன்றை நடத்தியதுடன், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் போதியளவு கலந்துரையாடப்படவில்லை எனத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.