மலேசியாவில் இலங்கையர் மூவர் படுகொலை : கைதான இலங்கை தம்பதிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
மலேசியாவில் இலங்கையர் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு இலங்கை தம்பதியினரை ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மலேசியாவின் செந்தூல் நகரில் இலங்கையர் மூவர் செப்டெம்பர் (24) அன்று படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கை தம்பதியினர் கைது
இது தொடர்பில் துரித விசாரணையை மேற்கொண்ட அந்நாட்டு காவல்துறையினர் இலங்கையர் மூவரும் கொலை செய்யப்பட்ட வீட்டில் தங்கியிருந்த இலங்கை தம்பதியினரை கைது செய்திருந்தனர்.
எனினும் இவர்கள் அந்த வீட்டின் உரிமையாளர்கள் அல்லவெனவும் கோலாலம்பூர் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.நேற்று (30 ) அந்நாட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் 07 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த இரு இலங்கையர்
கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு இலங்கையர்களைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்த கோலாலம்பூர் காவல்துறையினர், ஹுலு லங்காட் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த இரு இலங்கையர்களையும் கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் உயிரிழந்த மூன்று இலங்கையர்களும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என மலேசியா காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
