அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்க எச்சரிக்கை
மக்களின் பணத்தோடு விளையாடும் விளையாட்டை நிறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Preamdasa) தெரிவித்துள்ளார்.
திடீரென்று காளான் போல உருவான ஒரு நிறுவனத்திற்கு இந்த நாட்டில் வரி செலுத்துவோர் மற்றும் அப்பாவி மக்களின் 29 கோடி ரூபா மோசடியாகப் பயன்படுத்தி நானோ திரவத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
திஸ்ஸமஹாராம - பந்தகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற “கொவி ஹதகெஸ்ம” நிகழ்ச்சியின் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கம் அவசரமாக நானோ நைட்ரஜன் திரவங்களை இறக்குமதி செய்து கடுமையான மோசடிக்கு வழி வகுத்துள்ளதோடு தொடர்புடைய இறக்குமதி இராஜதந்திர அடிப்படையிலோ அல்லது முறையான கொள்முதல் செயல்முறையின் மூலமோ அல்ல.
இந்த பாரிய மோசடி பற்றி உடனடியாக பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, இதன் பின்னணியில் உள்ள மோசடிக்காரர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
இந்த நாட்டு மக்கள் அளித்த வாக்குகளின் மதிப்பை அரசாங்கத்தால் கடுமையான விதத்தில் மீறல்களைச் செய்துள்ளது என்றும், தற்போது அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மக்களை ஏளனப்படுத்துகின்றவர்களாக மாறியுள்ள நிலைக்குட்பட்டுள்ளார்கள்.
நாடளாவிய ரீதியில் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அரசியல் தூண்டுதலின் விளைவாக ஏற்பட்டது அல்ல.
மக்களை எங்கு போவார்கள் என்று தெரியாத நிலைக்கு தள்ளிய அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கோபத்தில் உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.