கொட்டித் தீர்க்கும் கனமழை: பிரதான வீதியின் ஒரு பகுதி தாழிறக்கம்
புதிய இணைப்பு
மலையக பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக (12) வட்டவளை - அகரகந்த பிரதான வீதியின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளதாக வட்டவளை காவல் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன கமகே தெரிவித்தார்.
லொனக் தோட்டத்திற்கு செல்லும் வீதிக்கு அருகில் இந்த சரிவு ஏற்பட்டதாகவும், அந்த வீதியில் கனரக வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதலாம் இணைப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
அத்தோடு,வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
