ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம்: ஈரான் அதிரடி
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம் விதிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கடந்த பெப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுடன் நடைபெற்று வரும் போரின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடுகளின் கப்பல்கள்
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஆயதுல்லா மொஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆதரவு நாடுகளின் கப்பல்கள் ஒருபோதும் இந்த நீரிணை வழியாக அனுமதிக்கப்படாது என ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தடையை மீறி நுழையும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சூழலில், பாதுகாப்பான பயணத்திற்காகச் சுங்கக் கட்டணம் வசூலிக்குமாறு ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர்.

இந்த நெருக்கடியைச் சமாளிக்கப் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும், பெரும்பாலான நாடுகள் அதற்கு உடன்படவில்லை.
இந்தநிலையில், கச்சா எண்ணெய் விநியோகம் முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஈரானின் இந்தச் சுங்கக் கட்டண வியூகம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |