வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் வெளியான நற்செய்தி
இலங்கையின் திறமையான தொழிலாளர்களுக்கு பஹ்ரைனில் நம்பிக்கைக்குரிய வேலை வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தவிசாளர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பஹ்ரைனில் இயங்கும் உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற அமர்வொன்றில் பங்கேற்றபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமர்வை பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
தொழிலாளர்களின் பாதுகாப்பு
தற்போது பஹ்ரைனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தவிசாளர் விக்ரமசிங்க, தொழிலாளர் இடம்பெயர்வு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், இலங்கை வெளிநாட்டினரின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்திய SLBFE தவிசாளர், பஹ்ரைனை தளமாகக் கொண்ட ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தொடர்ச்சியான ஆதரவையும் தீவிர ஈடுபாடுகளுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த அமர்வில் உரையாற்றிய பஹ்ரைனுக்கான இலங்கைத் தூதுவர் ஷானிகா திசாநாயக்க, இலங்கையின் திறமையான பணியாளர்களை விரிவுபடுத்துவதற்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்தின் பரந்த முயற்சிக்கு ஏற்ப திறமையான தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.
ஆட்சேர்ப்பு செயல்முறை
பஹ்ரைனில் இலங்கை தொழிலாளர்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை நெறிப்படுத்துதல், நெறிமுறை ஆட்சேர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான நலன்புரி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.
இதன்படி, பஹ்ரைனின் செழிப்பான தொழிலாளர் சந்தையில் வேலைவாய்ப்புக்கான புதிய வழிகளை ஆராயும் அதே வேளையில், இலங்கை தொழிலாளர்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
