ஓமானில் இலங்கை பெண்களுக்கு சித்திரவதை - கண்டறிய பறந்தது குற்றப் புலனாய்வுத் துறை
விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை பெண்கள்
ஓமானில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இலங்கை பெண்கள் மற்றும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான பெண்கள் குறித்து கண்டறிய குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய விசேட காவல்துறை குழு இன்று காலை ஓமான் நோக்கிச் சென்றுள்ளது.
இது தொடர்பாக சட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையிலேயே இந்தக் குழு சென்றுள்ளது.
இலங்கைப் பெண்களிடம் வாக்குமூலம்
ஓமானுக்குச் சென்ற அதிகாரிகள் ஓமானில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து, தூதரகத்தின் பாதுகாப்பில் காத்திருப்பு மையத்தில் தங்கியுள்ள 44 இலங்கைப் பெண்களிடம் வாக்குமூலம் பெறத் தொடங்கியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு உதவி காவல்துறை அத்தியட்சகர்கள் அடங்கிய காவல்துறை குழுவே ஓமான் சென்றுள்ளது.