யாழ். நெடுந்தீவுக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் இதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வீபே டி போருக்கும் (Wiebe de Boer) இடையிலான உத்தியோகபூர்வச் சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்று (21) நடைபெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
விருப்பம் வெளியிட்ட தூதுவர்
மேலும் இச்சந்திப்பின்போது, நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் கடந்த காலத்தில் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டைக்கு, தற்போது வருகை தரும் சுற்றுலாவிகளை விடவும் அதிகளவானவர்களை ஈர்க்க வேண்டும் எனத் தூதுவர் விருப்பம் வெளியிட்டார்.
இதற்குப் பதிலளித்த ஆளுநர், உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் யாழ்ப்பாணக் கோட்டையை மையப்படுத்திய சுற்றுலா மேம்பாட்டுக்கான விசேட அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் (கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம், பருத்தித்துறை ஆகிய இடங்களில்) அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவமனைகளில், கிளிநொச்சி மருத்துவமனைக்குத் தான் நேரில் சென்று பார்வையிட்டதாகத் தூதுவர் குறிப்பிட்டார்.
அம்மருத்துவமனைகளை முழு அளவில் இயங்கச் செய்வதற்குத் தடையாக உள்ள சவால்கள் குறித்தும் அவர் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.
முதலீட்டுக்கான சாதகமான சூழல்
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், "தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முதலீட்டுக்கான மிகச் சாதகமான சூழல் நிலவுகின்றதாக குறிப்பிட்டார்.

எமது மாகாணத்திலிருந்து விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை உற்பத்திப் பொருட்கள் மூலப்பொருட்களாகவே வெளியே கொண்டு செல்லப்படுவதாகவும் இவற்றை இங்கேயே பெறுமதிசேர் பொருட்களாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகளே எமக்கு அவசியமாகின்றது எனவும் வலியுறுத்தினார்.
மேலும், பனைசார் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாகப் பனையிலிருந்து புத்தாக்க முயற்சியாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் வைன் (Wine) உற்பத்தி குறித்தும் ஆளுநர் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்