அபராதம் விதித்ததால் கோடரியால் தாக்கப்பட்ட போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர்
அம்பலாந்தோட்டை காவல் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கோடரி தாக்குதலுக்குள்ளாகி உள்ளார்.
அம்பலாந்தோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அதிகாரியின் தலைப்பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கழுத்துப் பகுதிக்கு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காவல்துறை உத்தியோகத்தரை கோடரியால் தாக்கிய பின்னர் விஷம் அருந்தியுள்ளார். இதனையடுத்து சந்தேகநபரும் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் சந்தேக நபர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி அம்பலாந்தோட்டை காவல்துறையினரால் குடிபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக குறித்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதில் கோபமுற்ற சந்தேக நபர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், அபராதம் விதித்த அதிகாரிளை விடுத்து வேறொரு காவல்துறை உத்தியோகத்தரையே சந்தேக நபர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
