வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு எச்சரிக்கை தகவல்
இலங்கைக்கு விமான நிலையத்தினூடாக வருகை தரும் அனைத்து பயணிகளுக்கும் சுங்கத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
தடைசெய்யப்பட்ட மற்றும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் அல்லது வர்த்தக பொருட்களை அல்லது உடன் வராத பயணிகளின் பொருட்களை விமான நிலையத்தினூடாக எடுத்து வருவதை தவிர்க்குமாறு சுங்கத் திணைக்கள பணிப்பாளர் பி.பி.எஸ்.சி.நோனிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டுவர வேண்டாம்
கடந்த நாட்களில் தடைசெய்யப்பட்ட பொருட்களை பயணிகள் கொண்டுவருவது அதிகரித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட பொருட்களில் தங்கம், சிகரெட், மருந்து அலங்கார செடிகள் போன்ற பொருட்களும், நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி பிரச்சினைகளால் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பொருட்களும் இதில் அடங்கும்.
சில பயணிகள் சுங்கக் கட்டளைச் சட்டம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகளை மீறி வணிக அளவுகளில் பொருட்களை கொண்டு வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
மீறினால், அனைத்துப் பொருட்களையும் பறிமுதல்
எனவே, விமான நிலையம் வழியாக குறித்த பொருட்களை கொண்டு வரவேண்டாம். இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறினால் கொண்டுவரப்பட்ட அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்யப்படும்.
மீறினால், சுங்கச் சட்டம் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.