திருகோணமலை கடற்கரையோர புத்தர் சிலை வைப்பு வழக்கு ஒத்திவைப்பு
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான வழக்கு 2026 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (17) திருகோணமலைவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் கடற்கரையிலிருந்து சுமார் 11 மீற்றர் தூரத்திற்குள் சட்டவிரோதமாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அப்பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவி மத மற்றும் சமூக ரீதியிலான பதற்ற நிலையை உருவாக்க முயற்சிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேலதிக விசாரணை
இவ்வழக்கை திருகோணமலை துறைமுகப் காவல்துறை கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 28(01) மற்றும் 14(01) ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் கடலோர பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளை மீறி கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதனுடன் புத்தர் சிலை ஒன்றை நிறுவும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குறித்த சம்பவம் அப்போது பிரதேச மக்களிடையிலும் சிவில் சமூக அமைப்புகளிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடற்கரை வள முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி கடற்கரைக்கு அண்மித்த பகுதிகளில் நிரந்தர கட்டுமானங்களை மேற்கொள்வது சட்டவிரோதமானது என அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்ததுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து துறைமுகப் காவல்துறையினர் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இன்று வழக்கு மீண்டும் மன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேலதிக விசாரணைகள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளமை கருத்தில் கொள்ளப்பட்டு, வழக்கை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |