திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : தேரர்களின் கைது குறித்து பிரதமர் விளக்கம்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
அத்துடன் சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் எனவும் பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (06) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
பௌத்த தேரர்கள் கைது
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாடாளுமன்றத்தில் காலையில் அடிப்படையற்ற விடயங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை பிரதான பழக்கமாக எதிர்க்கட்சியினர் கொண்டுள்ளனர்.

எதிர்க்கட்சியின் ஒருசில சிரேஷ்ட உறுப்பினர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையிட்டு கவலையடைகிறேன்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்கட்சியினர் உறுப்பினர் குறிப்பிட்டார். இது முற்றிலும் தவறானது. போலியானது.
அவசரகால சட்டம்
சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள். பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே எதிர்க்கட்சியினர் ஏன் இவ்வாறு பொய்யுரைக்கிறார்கள்.

அதேபோல் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார்கள். எந்த ஊடகத்துக்கு எதிராக , என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும்.
எந்த போராட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம் என்பதை எதிர்க்கட்சி குறிப்பிட வேண்டும். மக்களை தவறாக வழிநடத்தும் விடயங்களையே குறிப்பிடுகிறார்கள்." என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 1 மணி நேரம் முன்