பழி தீர்க்க காத்திருக்கும் ஈரான் : ட்ரம்பை சூரியக் குளியலில் கொல்ல சதி
அமெரிக்க (United States) ஜனாதிபதி ட்ரம்ப் (Donald Trump), அவரது வீட்டில் சூரியக் குளியலில் ஈடுபடும் போது, ட்ரோன் தாக்குதலின் மூலம் கொல்லப்படலாம் என ஈரான் (Iran) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி (Javad Larijani) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் அமெரிக்க தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போரின் போது, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது அந்நாட்டை ஜீரணிக்க முடியாத விஷயமாக மாறியுள்ளது.
ஈரான் தலைவர்
எனவே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிராக ஈரான் தலைவர்கள் வெளிப்படையான மிரட்டல்களையும், கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரான் நாட்டு ஆட்சியாளரான அயதுல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறித்து பேசிய விஷயம் தற்போது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது “புளோரிடாவின் உள்ள அவரது வீட்டில் ட்ரம்ப் நீண்ட நேரம் சூரிய குளியல் போட முடியாது. ஏனெனில், அவர் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம். இது மிகவும் எளிமையான விஷயம் என்று கூறினார்.
ஜனாதிபதி ட்ரம்ப்
கடந்த 2020ம் ஆண்டு ஈரான் தளபதி சுலைமாணியை ட்ரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே, ஈரான் தரப்பில் சுமார் ரூ.225 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. ஈரான் ஆட்சியாளர் கமேனிக்கும், கடவுளுக்கும் எதிரானவர்களை அழிப்பதற்காக இந்த தொகை பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
ஈரான் மக்களும், வெளிநாடுகளில் வசிக்கும் ஈரானியர்களும் இதற்காக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரான் மிரட்டல் குறித்து ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையில் அது ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கூறிய ட்ரம்ப், தான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் போட்டதாகவும், தனக்கு அதன் மீது ஆர்வமில்லை என்றும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
