ஈரானுக்கு நிபந்தனைகளுடன் பொருளாதார உயிர்நாடியை வழங்கும் ட்ரம்ப்
போருக்குப் பிந்தைய புனரமைப்பிற்காக ஈரானுக்கு 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தனியார் நிதி திட்டத்தை உருவாக்கும் முன்மொழிவானது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிதியில் கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகள் முக்கிய ஆதரவாளர்களாகச் செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் உள்ளிட்ட பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்படும் நிதி ஆதரவை கட்டுப்படுத்தும் கடுமையான நிபந்தனைகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேதங்களுக்கு இழப்பீடு
போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக அமெரிக்காவிடமிருந்து நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை நேரடியாக வழங்குமாறு ஈரான் முதலில் கோரியிருந்தது. எனினும், அக்கோரிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் நிராகரித்ததைத் தொடர்ந்து, தனியார் புனரமைப்பு நிதி உருவாக்கும் யோசனை முன்னிலைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இது ஈரான் தனது விருப்பப்படி பயன்படுத்தக்கூடிய நிதி அல்ல என்றும், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், துறைமுகங்களைப் புதுப்பித்தல் போன்ற குறிப்பிட்ட திட்டங்களுக்காக மட்டுமே இந்த நிதி ஒதுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தில் இந்த நிதி நடைமுறைப்படுத்தப்படலாம் என முன்மொழியப்பட்டிருந்தாலும், இன்னும் பல தீர்க்கப்படாத பிரச்சினைகள் காரணமாக அதன் நடைமுறை சாத்தியம் குறித்து சந்தேகங்கள் நிலவுகின்றன.
இரண்டாம் கட்டத்தை எட்ட முடிந்தால், வளைகுடா நாடுகள் ஈரானில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டக்கூடும்.
ஆனால் அது நடைபெறுமா என்பது இன்னும் உறுதியற்றதாகவே உள்ளது ஈரானியத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியத்தில் நீண்டகால நிலைத்தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்பு இந்த நிதியத்துக்கு இருப்பதாக வளைகுடா நாடுகள் கருதுகின்றன.
ஈரானின் நடத்தை மாற்றம்
அதேவேளை, ஈரானின் நடத்தை மாற்றம் மற்றும் நம்பிக்கை மீளமைப்பு போன்ற அம்சங்கள் உறுதி செய்யப்படாமல் பெருமளவு முதலீடுகளை மேற்கொள்வதில் அவர்கள் எச்சரிக்கையுடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை அமெரிக்காவும் ஈரானும் முக்கிய சோதனையாகக் கருதுகின்றன.
இந்த கட்டம் எந்த நேரத்திலும் தோல்வியடையக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா உண்மையிலேயே தடைகளை தளர்த்துகிறதா, மேலும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகிறதா என்பதை ஈரான் கவனித்து வருகிறது.
அது நடைபெறாவிட்டால், விரிவான உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளுக்கு அர்த்தமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 14 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்