அணு ஆயுதம் ஏந்திய ஈரான் உலகிற்குப் பேரழிவு: நட்பு நாடுகளுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை
ஈரானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் போதுமான ஆதரவை வழங்கவில்லை எனத் தெரிவித்து ஸ்பெயினையும் இத்தாலியையும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கடுமையாகச் சாடியுள்ளார்.
அந்த நாடுகள் ஈரானின் அணு ஆயுத விவகாரத்தில் மெத்தனமாக இருப்பதாகவும் ஒருவேளை ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அவை சரியெனக் கருதுகின்றனவோ எனவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர அணுகுமுறை
இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தற்போதைய இராஜதந்திர அணுகுமுறை தமக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணு ஆயுத முனைப்பு குறித்து எச்சரித்த ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதைச் சரியெனக் கருதும் எவரும் புத்திசாலிகள் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டால் உலகம் இதுவரை பார்த்திராத அளவிலான சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தனது நிர்வாகத்தின் கீழ் அத்தகைய சூழல் ஒருபோதும் நடக்காது என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்குவதில் சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என்பதை அவர் இதன் மூலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |