ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் கெடுபிடி...! ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
ஹார்முஸ் நீரிணையை ஈரான் கையாளும் விதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்த நீர்வழிப் பாதை வழியாகக் கப்பல்களை அனுமதிப்பதில் ஈரான் மிகவும் மோசமாகச் செயல்படுவதாக ட்ரம்ப் சாடியுள்ளார்.
அங்கு செல்லும் டேங்கர் கப்பல்களிடம் ஈரான் சட்டவிரோதமாகக் கட்டணம் வசூலிப்பதாக வரும் தகவல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம்
உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் இந்தப் பாதை வழியாகவே நடைபெறுவதால் ட்ரம்பின் இந்த அறிக்கை சர்வதேசச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு, பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரும் இந்த விவகாரத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ட்ரம்புடன் அவர் மேற்கொண்ட அவசரத் தொலைபேசி உரையாடலின் போது ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தை மீண்டும் பாதுகாப்பாகத் தொடங்குவதற்கான நடைமுறைத் திட்டம் குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்துள்ளனர்.
பாதுகாப்புப் படை
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்நிறுத்தம் ஒருபுறம் நீடித்து வந்தாலும் குவைத்தில் உள்ள தேசிய பாதுகாப்புப் படை தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் பிராந்தியத்தில் மீண்டும் ஒரு போர் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
மறுபுறம் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து வருகின்றன. லெபனானில் போர்நிறுத்தம் எதுவும் இல்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட பாரிய வான்வழித் தாக்குதல்களில் 300 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், நேற்றிரவும் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே பரஸ்பரத் தாக்குதல்கள் நீடித்துள்ளமை அமைதி முயற்சிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |