ஈரானை நோக்கிப் பாயும் இரண்டாவது ஆர்மடா: ட்ரம்பினால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்
மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் தாக்குதல் குழுவை அனுப்புவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தெஹ்ரான் உடனான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ஈரான் மீதான அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்கப் படைகள்
இந்தநிலையில், எங்களிடம் ஒரு ஆர்மடா (Armada) அங்கு சென்றுகொண்டிருக்கிறது, இன்னொன்றும் செல்லக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், கூடுதல் போர்க்கப்பல்களை அனுப்புவது குறித்துச் சிந்தித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) போர்க்கப்பலுடன் இணையும் இரண்டாவது தாக்குதல் குழு தொடர்பான உள் விவாதங்கள் நடந்து வருவதை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தன.
இராணுவ பலம்
அந்தத் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், நாம் ஓர் ஒப்பந்தம் செய்வோம் அல்லது கடந்த முறையைப் போலவே மிகவும் கடினமான ஒன்றைச் செய்ய வேண்டியிருக்கும் எனத் தெரிவித்து ஈரானுக்கான தேர்வை ஒரு எச்சரிக்கையாக முன்வைத்துள்ளார்.

தனது இந்த இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான விருப்பமே தற்போது இராஜதந்திர நிலப்பரப்பை மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய அதிகாரிகளுடன் அடுத்த வாரம் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள டிரம்ப், தற்போதைய சூழலில் தெஹ்ரான் மிகவும் தீவிரமாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |