வடகிழக்கில் அதிகமாக தோன்றும் விகாரைகளின் பின்னணி
இலங்கை வரலாற்றுப் பாரம்பரியத்தில் நாகர்கள் வாழ்ந்த நாடாக கொள்ளப்படுகிறது. இதனால் இலங்கையில் உள்ள தமிழர்களையும் சிங்களவர்களையும் சேர்த்து நாக கோத்திரம் என அழைக்கப்படுகிறது.
நாகநாடு எனவும் இலங்கை அழைக்கப்பட்டது. புராதன வழிபாடாகிய நாக வழிபாடு மேன்மை பெற்றிருந்தது. காலத்தால் பிந்திய பௌத்தம் இலங்கைக்குள் வந்தபோது நாக வழிபாடும் பௌத்ததினுள் புகுந்து கொண்டது.
இதனால் நாகவிகாரைகள் பலவும் உருவாகின.

DNA பரிசோதனைகளிலும் கூட , சிங்களவர்களினதும் , தமிழர்களினதும் பரம்பரை அலகுகள் ஒத்தாகவே இருக்கின்றன. தமிழர்களைப் போலவே சிங்களவர்கள் மத்தியிலும் சாதியம் காணப்படுகிறது , இதன் வரலாற்றுப் பின்னனியில் , பௌத்த மதத்திற்காக , அதன் உச்ச பீடங்களாக
1) மல்வத்து பீடம்
2) அஸ்கிரிய பீடம்
என்னும் இரண்டு பௌத்த உயர்பீடங்கள் உருவாகி பௌத்த மத பண்பாட்டை வளர்க்கலாயின. சிங்களவர்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்றும், இந்த பீடங்கள் மதிப்பளிப்பது கிடையாது.
சிங்கள உயர் சாதியினரைத் தவிர்ந்த எவரும், இந்த பீடங்களின் மஹாநாயக்கர்களாக வரமுடியாது .
இது இன்றுவரை ஓர் நடைமுறையாகவுள்ளது. சிங்கள உயர்சாதியினரின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட சிங்கள பௌத்தர்கள் தங்களுக்கு என ஒரு பீடத்தினை உருவாக்கலாயினர், அந்த பீடமே, முன்றாவதாகிய அமரபுர நிக்காய என்னும் பீடமாகும்.
பௌத்தின் காவலர்களாக

இந்த பீடத்தினைச் சார்ந்த பௌத்த துறவிகளுக்கு, தென்னிலங்கையில் பெரியளவில் மதிப்பு மரியாதை கிடையாது. இதுவும் ஒரு சிங்கள சாதிய அடக்கு முறையாகவே உள்ளது.
இத்தகைய பின்புலத்தில் தங்களை பௌத்தின் காவலர்களாக காட்டிக் கொள்ளவும், தங்களுக்குரிய அந்தஸ்தைப் பெறவும் குறித்த , அமரபுர நிக்காய பீடத்தினர் முயன்று வருகின்றனர் .
இவர்களுடைய முயற்சி, நூற்றாண்டு கடந்தநிலையிலும் வெற்றிபெற்றதாக இல்லை .
இதனுடைய பாரிய ஆயுதமாகவே, இந்த அமரபுர நிக்காய பீடத்தைச் சேர்ந்தவர்கள், தமிழர்களுக்கு எதிரான இன வாத , மத வாத விடயங்களை கையில் எடுக்கலாயினர்.
வட - கிழக்கில் சட்டவிரோத விகாரைகள்

அதன் பின்னணினியிலேயே, வடகிழக்கில் சட்டவிரோத விகாரைகளை அமைப்பதிலும், தமிழ் பௌத்தம் நிலவிய போது இருந்த விகாரைகளை மீளுருவாக்கம் செய்வதிலும் ஈடுபடுகிறார்கள்.
இதற்கு ஏற்றாற்போலவே, வட கிழக்கில் பௌத்த மயமாக்கலுக்கு திட்டமிட்ட, இனவாத அரசுகளும், இனவாத அரசியல் கட்சிகளும் இரை போட்டு அவர்களை வளர்த்து வருகிறார்கள்.
இந்த விடயத்தின் அடிப்படையில் நாம் ஆராய்ந்தால், யாழ்ப்பாணம் நாகதீப விகாரையில் இருந்து , நையனாதீவு விகாரை முதல், இறுதியாக கிழக்கு மாகாண ஆளுநனரால் தடுத்து நிறுத்தப்பட்ட , திருகோணமலை 6 ஆம் கட்டை பெரியகுளம் விகாரை வரையான விகாரைகள், பெரும்பாலும் இந்த அமரபுர நிக்காயவின் ஆளுகைக்கு உட்பட்டவையே.
எனவே தான் இந்தப் பின்னனியில், ஆயுதப்போராட்டத்தின் பின் வலுவிழந்திருந்த தமிழர் சாதியம் மீளுருவாக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறான மீளுருவாக்கத்தினால் ஆலய பிரவேச தடை என்பன மீள ஆரம்பிக்கப்படுகிறது.
பௌத்த மதத்தினை தழுவி

இதனால் பாதிக்கப்படவுள்ள தமிழரின் தாழ்த்தப்பட்ட பகுதியினர், அமரபுர நிக்காயவோடு கை கோர்க்க தொடங்குவர். அந்த கருமமும், தற்போது கன கச்சிதமாக முன்னேடுக்கப்படுகிறது .
இதன் விளைவாக தமிழ் தாழ்த்தப்பட்டோர் பௌத்த மதத்தினை தழுவி, அமரபு நிக்காயவினுள் அங்கம் பெறுவர். காலவோட்டத்தில் பௌத்ததிற்க்கு முன்னுரிமை என்றும் அடிப்படையில், தமிழ்ப்பௌத்தம், தமிழர்களில் முதன்மை பெறுவர்.
இதன் தாக்கமாக தமிழர்களின் சுதேச மதமும் தமிழ்தேசியமும் அழிக்கப்படலாம் இதனுடைய தாக்கத்தினை தமிழர் தரப்புக்கள் உணர்ந்து செயற்படுவது அவசியமானது .