போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் தயாரித்து விற்பனை! இருவர் கைது
போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவரை நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு சாரதி அனுமதிப்பத்திரங்களும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொரலஸ்கமுவ, வேரஹெர பகுதியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் இந்தச் சட்டவிரோத வலையமைப்பு செயல்பட்டு வந்துள்ளது.
கைது நடவடிக்கை
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்படும் அசல் அனுமதிப்பத்திரங்களை போன்றே போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து, அவற்றை ரூ. 40,000 முதல் ரூ. 45,000 வரையிலான தொகைகளுக்கு இவர்கள் விற்பனை செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் மூலம் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறையினரின் கூற்றுப்படி, ஒரு சந்தேக நபர் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலும், மற்றொருவர் வேரஹாரவில் உள்ள ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் ஒன்றிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தும்மலசூரிய, யதம்வெல மற்றும் பொரலஸ்கமுவ, கட்டுவாவல ஆகிய இடங்களைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய நபர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சந்தேக நபர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |