மன்னாரில் இருவேறு இடங்களில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்கள்! தொடரும் விசாரணை
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் காணப்பட்ட பற்றைக்காட்டு பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (7) மதியம் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த அப்பகுதி மக்கள் உடனடியாக கிராம சேவையாளர் ஊடாக பேசாலை காவல்துறை தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தை
இதையடுத்து பேசாலை காவல்துறையினர் குறித்த பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சடலமாக மீட்கப்பட்ட நபர் பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் ( வயது-41 ) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும், மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் நிலையில் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள இடத்தில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத சடலம்
இதேவேளை, மன்னார் வங்காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை (7) காலை உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால் இதுவரை அதனை அடையாளம் காணமுடியவில்லை என கூறப்படுகிறது.
இதன்படி, குறித்த சடலம் இந்திய மீனவர் ஒருவருடையதா? அல்லது தொழிலுக்குச் சென்று காணாமல் போன மீனவரா? என்பது குறித்து இதுவரை தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |