இரு பேருந்துகள் மோதி விபத்து : 23 பேர் படுகாயம்!
ஹொரணை - கொழும்பு பிரதான வீதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்தில் 23 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர்களில் இருவர் களுபோவில போதனா வைத்தியசாலையிலும் ஏனையவர்கள் வேதர வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து,ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின், பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கஹதுடுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.