ஆறு நாட்களின் பின்னர் இந்தியாவில் கைதான யாழ்.கடற்றொழிலாளர்கள்! உறவினர்களின் கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரு கடற்தொழிலாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை கடற்றொழிலுக்காக படகொன்றில் இரண்டு கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.
நீரோட்டத்தில் சென்ற படகு
காணாமல் போன இருவரையும் , உறவினர்கள் தேடி வந்த நிலையில் , காணாமல் போன இருவரும் பயணித்த படகு கடலில் பழுதடைந்த நிலையில் இருவரும் கடலில் தத்தளித்த வேளை, அவர்களை மீட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் அவர்களுக்கு உணவளித்து, அவர்களை படகுடன் இலங்கை கடற்பரப்புக்கு அழைத்து வந்து விட்டு சென்றனர்.

எனினும், மீண்டும் அவர்களின் படகு நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு இந்திய கரையில் கரையொதுங்கிய நிலையில், இந்திய கடலோர காவல் படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் இருவரையும் பாதுகாப்பாக நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் அவர்களின் தொழில் உபகரணங்களை அவர்களிடம் வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |