ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய மேலும் இரண்டு டயகம பெண்கள் - ஆரம்பமானது விசேட விசாரணை
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் டயகம பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு பெண்கள் பணியாற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிதத்துள்ளார்.
குறித்த இரண்டு பெண்களையும், தற்போது மரணமடைந்த இஷாலினி என்ற சிறுமியை அழைத்து வந்த நபரே, ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு ரிஷாட் பதியுதீனின் வீட்டில் முன்னதாக கடமையாற்றிய இரண்டு பெண்களிடமும் டயகம பகுதியில் வைத்து நேற்றைய தினம் வாக்குமூலம் பதிவு செய்துகொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் இதற்கு முன்னர் கடமையாற்றிய டயகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களின் வாக்குமூலத்தில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை டயகம பிரதேசத்தைச் சேர்ந்த இஷாலினி என்ற சிறுமியே தற்போது தீக் காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.