யாழில் போதை பொருளுடன் சுற்றி வளைக்கப்பட்ட சந்தேகநபர்கள்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் வைத்து 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 290 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி - கஜிந்தன்
முதலாம் இணைப்பு
யாழில் இரு வெவ்வேறு இடங்களில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மூளாய் - வேரம் பகுதியில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இரண்டு கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருட்கள்
அவர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்பவர் என தெரியவந்துள்ளது.
அத்தோடு, பொன்னாலை தெற்கு, சுழிபுரம் பகுதியில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு கைது நடவடிக்கைகளும் வட்டுக்கோட்டை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |