பிரித்தானிய வைரஸ் தொற்றாளருடன் நெருங்கிப் பழகியவர்களை தேடும் 200 CID அதிகாரிகள்
பிரித்தானியவின் திரிபடைந்த B. 1. 1. 7 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களை தேடும் நடவடிக்கைகளில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நடவடிக்கைகளில் 200 க்கும் மேற்பட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மேற்படி வைரஸ் தொற்று பரவல் இனங்காணப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை, புலனாய்வுப் பிரிவினர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் பலரை இதுவரை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மிக வேகமாக பரவக்கூடிய பிரித்தானிய திரிபு கொரோனா வைரஸ் நோயாளர்கள் நாட்டில் ஆறு மாவட்டங்களிலுள்ள 21 பிரதேசங்களிலிருந்து இனங்காணப்பட்டுள்ளன.
சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஜீவ வாயு விஞ்ஞானத் துறை பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவன்தர தலைமையிலான குழுவினர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வைரஸ் தொற்றுநோயாளிகளின் 66 மாதிரிகளை ஆய்வுசெய்து பிரித்தானிய B. 117 வகை வைரஸை இனங்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.