பிரித்தானியாவில் வேகமெடுக்கும் புதிய விகாரம்!! கட்டுப்பாட்டு விதிகள் அறிவிக்கப்பட்டன
பிரித்தானியாவில் புதிய விகாரமடைந்த ஒமிக்ரோன் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பெரும்பான பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இயலுமானவர்கள் வீடுகளிலேயே இருந்து பணியாற்றுமாறு கோரப்பட்டுள்ளனர்.
மேலதிக கொவிட் 19 தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டு விதிகளை நோக்கி அரசாங்கம் நகர்வதாக பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்
. இந்தப் புதிய விதிகளானது முடக்க கட்டுப்பாடுகளாக அமையாது என்ற போதிலும் திட்டம் இரண்டின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள விதிகளை கொண்டிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்த வகையில் பிரித்தானியாவில் இரவு நேர களியாட்ட விடுதிகள் மற்றும் பாரிய அரங்குகளுக்குள் பிரவேசிப்பதற்கு தடுப்பூசி மருந்தைப் பெற்றமைக்கான சான்றிதழ் அடுத்த வாரம் முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.
புதிய விகாரமடைந்த வைரஸ் தொற்று தொடர்பில் மேலதிமாக ஆய்வு செய்யப்பட்டுவருவதாகவும், அது தொடர்பில் சிறப்பான விம்பத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பொறிஸ் ஜோன்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அதனால் துரதிஷ்டவமான மரணங்கள் ஏற்படக் கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெல்டா வைரஸ்சை விட மிக வேகமாக ஒமிக்ரோன் வைரசானது பரவிவருகின்றது எனவும் பிரித்தானியப் பிரதமர் கூறியுள்ளார். ஆரம்ப பகுப்பாய்வுகளின் பிரகாரம், 2.5 தொடக்கம் 3 நாட்களுக்குள் கொரோனா தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொறிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமை முதல் கலை அரங்குகள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் பிரவேசிப்போர் கட்டாயம் முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இயலுமானவர்கள், வீடுகளில் இருந்து பணியாற்றும் விதியானது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ள அதேவேளை, புதன்கிழமை முதல் இரவு நேர களியாட்ட விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளுக்குள் பிவேசிப்போர் தடுப்பூசி மருந்து சான்றிதழை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.