பிரித்தானிய அரசாங்கத்தின் திடீர் முடிவு - மீண்டும் உயரும் பவுண்டின் பெறுமதி
பிரித்தானியாவின் லிஸ் ட்ரஸ் தலைமையிலான அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 45 பில்லியன் பவுண்ஸ் பெறுமதியான வரிக் குறைப்பு திட்டங்களை அந்த நாட்டு நிதி அமைச்சர் மீளப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நிதி அமைச்சர் பதவியில் இருந்து குவாசி குவார்ரெங் பதவி விலக வேண்டும் என தொழிற்கட்சி மற்றும் லிபரல் ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்ற பின்னர் மிகப் பாரிய வரிக் குறைப்புடன் கூடிய குறுகிய வரவு - செலவுத் திட்ட அறிவிப்பை நிதி அமைச்சர் குவாசி குவார்ரெங் வெளியிட்டிருந்தார்.
வரிக் குறைப்பில் கவனச் சிதறல்
எனினும் இந்த வரவு - செலவுத் திட்டம் வெளியிடப்பட்டு 10 நாட்களில் அந்தத் திட்டங்களை மீளப் பெறுவதாக நிதி அமைச்சர் குவாசி குவார்ரெங் தற்போது அறிவித்துள்ளார்.
இந்த வரிக் குறைப்பு திட்டங்களில் கவனச் சிதறலான விடயங்கள் உள்ளதாகவும், அந்த விடயங்களுக்கு குறித்து சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் அதற்கு செவிசாய்த்து, வரிக் குறைப்பு திட்டங்களை மீளெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிதி அமைச்சரின் இந்த வரிக் குறைப்பு திட்டங்களுக்கு கென்சவேட்டிவ் கட்சியின் பல்வேறு உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த வரிக் குறைப்பு திட்டங்களுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற முடியாது என்பது வெளிப்படையான ஒரு விடயமாக உள்ளதாக தொழிற்கட்சியின் நிழல் நிதி அமைச்சர் ரேச்சல் றீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வரிக் குறைப்பு அறிவிப்பினால் ஏற்கனவே பிரித்தானியாவின் பொருளாதாரத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது முற்றுமுழுதான திறமையற்ற செயற்பாடு என விமர்சித்துள்ள ஸ்கொட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்ரேஜன் , மில்லியன் கணக்கான மக்களை இது பாதிக்கச் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதமர் லிஸ் ட்ரஸின் நிலைப்பாடு
எனினும் தமது வரிக் குறைப்பு திட்டங்களை நியாயப்படுத்தியுள்ள பிரதமர் லிஸ் ட்ரஸ், தமது கொள்கையை கைவிடப் போவதில்லை என கூறியுள்ளார்.
அத்துடன் நிதி அமைச்சர் குவாசி குவார்ரெங் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும் குறுகிய வரவு - செலவுத் திட்டத்தில் உள்ள ஏனைய விடயங்களை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பிரதமர் லிஸ் ட்ரஸ் குறிப்பிட்டுள்ளார்.
வரிக் குறைப்பு திட்டங்களை தவிர்த்து ஏனைய விடயங்களுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கும் எனவும் லிஸ் ட்ரஸ்சின் பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக இந்த வரிக் குறைப்பு முன்மொழிவுகளுக்கு பிரதமர் லிஸ் ட்ரஸ், நாடாளுமன்றத்தில் ஆதரவை பெற முடியாமல் போகும் என முன்னாள் அமைச்சரவை அமைச்சர் கிறாண்ட் ஷார்ப்ஸ் எச்சரித்திருந்த நிலையில், அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாரிய வீழ்ச்சியை பதிவுசெய்திருந்த டொலருக்கு எதிராக பவுண்டின் பெறுமதி மீண்டும் இன்று உயர்வை பதிவுசெய்துள்ளது.