பிரித்தானியா பயண எச்சரிக்கை விடுவிப்பு
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தியாவசிய பயணங்களைத் தவிர இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரித்தானியா தனது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் இலங்கைக்கான பயண எச்சரிக்கை தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்குச் சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக பலர் உயிரிழந்ததுடன், 200இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் அத்தியாவசிய பயணங்கள் தவிர்ந்த ஏனைய பயணங்களை இலங்கைக்கு மேற்கொள்ள வேண்டாம் என பிரித்தானியா அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் இருக்கும் பிரித்தானிய பிரஜைகள் அல்லது பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள் பேரணி மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்றும் பிரித்தானியாவின் வெளியுறவு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.