சீனாவை அடக்க மாஸ்டர் பிளான்!! அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா கூட்டிணைவு
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையில் எட்டப்பட்ட முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை முதுகில் குத்தும் நடவடிக்கை என பிரான்ஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போன்றே, ஜோ பைடனும் செயற்படுவதாக பிரான்ஸ்சின் வெளிவிவகார அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் இந்தோ - பசுபிக் பிராந்தியம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் சொந்தமான பாதுகாப்பு மூலோபாயங்களை உருவாக்க வேண்டும் என்பதையே புதிய முத்தரப்பு உடன்படிக்கை எடுத்துக்காட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த இராஜதந்திரி ஜோசெப் பொறெல் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்துவரும் நிலையில், அதனை எதிர்கொள்ளும் பல்வேறு பிரயத்தனங்களை அமெரிக்கா மேற்கொண்டுவருகின்றது.
அந்த வகையில் சீனாவுடன் வணிகம், ஜனநாயக செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் முரண்பட்டுள்ள அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவை இணைத்துக்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த முத்தரப்பு இந்தோ - பசுபிக் பாதுகாப்பு உடன்படிக்கையை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை எதிர்கொள்ளும் முயற்சியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையானது இரண்டாம் உலகப் போரின் பின்னர் மூன்று நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் மிகப் பெரிய பாதுகாப்பு உடன்படிக்கை என அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய உடன்படிக்கையின் கீழ் அமெரிக்காவின் வழங்கப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அணு ஆயுத திறன்கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை அவுஸ்திரேலியா நிர்மாணிக்கவுள்ளது.
இதன்மூலம் பல பில்லியன் டொலர் பெறுமதியான நீர்மூழ்க்கி கப்பல்களை பிரான்ஸ்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் வகையில் 2016 ஆம் ஆண்டு எட்டப்பட்ட உடன்படிக்கை கைவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து ஆத்திரத்தையும் கசப்புணர்வையும் வெளியிட்டுள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர், இது நம்பிக்கையை மீறும் நடவடிக்கை என விமர்சித்துள்ளார்.
மிருகத்தனமானதும் ஒரு தலைப்பட்சமானதும் கணிக்க முடியாத வகையிலும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட தீர்மானங்களை மீள நினைவூட்டும் வகையில் ஜோ பைடனின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நட்பு நாடுகளுக்கு இடையில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறக் கூடாது என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நம்பிக்கையுடனேயே அவுஸ்திரேலியாவுடன் உறவுகளை பேணிவருவதாகவும், அந்த நம்பிக்கையை மீறி, முதுகில் குத்தும் நடவடிக்கையை அவுஸ்திரேலியா மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான முத்தரப்பு உடன்படிக்கையில, செயற்கை புலனாய்வு, சைபர், குவாண்டம் தொழிற்நுட்பங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கடந்த பல தசாப்தங்களில் நாடுகளுக்கு இடையில் எட்டப்பட்ட மிகப் பெரிய பாதுகாப்பு உடன்படிக்கையாக இது அமைந்துள்ளது. இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ ரீதியான வலுகட்டமானதும் உறுதியானதுமான நடவடிக்கைகள் குறித்து மேற்குலக நாடுகள் அண்மைய வருடங்களில் தமது பாரிய கரிசனையை வெளியிட்டிருந்தன.
இந்தப் புதிய உடன்படிக்கையானது, பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் என மூன்று நாடுகளின் தலைவர்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை அறிவிப்பு குறித்து வொஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
மூன்று நாடுகளும் பனிப்போர் மனோநிலை மற்றும் தவறான அபிப்பிராயங்களுடன் செயற்படுவதாக சீனத் தூதரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.