உக்ரைன் போரில் கசிந்த அமெரிக்காவின் திட்டம்! ஐரோப்பிய தரப்பு விடுத்த எச்சரிக்கை
உக்ரைனில் நடைபெறும் போருக்கான தீர்வில், உக்ரேனியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் நேரடியாகப் பங்கேற்க வேண்டும் என்று ஐரோப்பிய வெளிவிவகார அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போரை நிறுத்தும் நோக்கில், உக்ரைன் தனது நிலப்பகுதிகளையும் ஆயுதங்களின் ஒரு பகுதியையும் கைவிட்டு, இராணுவத்தின் அளவை குறைக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தை அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த தகவல் வெளிவந்துள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார தலைவர்கள் தங்களது எதிர்ப்பை தெளிவாக முன்வைத்துள்ளனர்.
புடினிடம் சரணடையும் திட்டம்
“நாங்கள் எப்போதும் நிலைத்த அமைதிக்கும் நியாயமான தீர்வுக்கும் ஆதரவாக உள்ளோம். ஆனால் எந்தத் திட்டம் உருவாக்கப்பட்டாலும், அதில் உக்ரைனும் ஐரோப்பாவும் இடம் பெற வேண்டும்,” என்று ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.

Image Credit: EL PAÍS English
பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், “சமாதானத் திட்டம் என்ற பெயரில் புடினிடம் சரணடைவதை ஐரோப்பா ஏற்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பல ஐரோப்பிய நாடுகளும் இதே நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளன. இதேவேளை, உக்ரைன் போருக்கான அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு திட்டத்தை அமெரிக்கா இதுவரை முன்வைக்கவில்லை எனவும், ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்யாவிற்கு சாதகமான போக்கை காட்டி வருவதாகவும் மூத்த ஐரோப்பிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜெலென்ஸ்கிக்கு அழுத்தம்
மேலும், அமெரிக்கா முன்வைக்கும் எந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஏற்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Image Credit: BBC
உக்ரைன் நிலப்பகுதி அல்லது ஆயுதங்களை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது எதிர்காலத்தில் அந்த நாட்டுக்கு பெரும் பின்னடைவாக மாறும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் பிராந்திய விருப்பங்களை எதிர்கொண்டு வரும் ஜெலென்ஸ்கி நிர்வாகத்திற்கு, இப்படியான எந்தத் தீர்வும் தீவிர சவால்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |