உக்ரைன் பதற்றத்தை தணிக்க ஐரோப்பிய தலைவர்கள் புதிய நகர்வு
உக்ரைன் - ரஷ்ய நெருக்கடியில் அமெரிக்காவின் நகர்வுகளை விட தமது சமாதான முயற்சிகள் பதற்றத்தை தணிக்கும் என்ற நம்பிக்கையில் ஐரோப்பிய தலைவர்களின் புதிய பேச்சுவார்த்தை முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
ரஷ்ய துருப்புகள் உக்ரையினில் நெருக்கடியை அதிகரிக்காது எனும் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புட்டினின் உறுதிமொழியுடன், பிரான்ஸ் அரசதலைவர் இமானுவேல் மக்ரன் தலைமையில் ஐரோப்பிய தலைவர்களின் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த திங்கட்கிழமையன்று மொஸ்கோவில் ரஷ்ய தலைவர் புட்டினுடன் கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடத்தப்பட்ட பேச்சுக்களுக்குப் பின்னர் நேற்று உக்ரேன் அரசதலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசிய மக்ரன் அதன் பின்னர் பெர்லினுக்குச் சென்று ஜேர்மன் சாஞ்சலர் ஒலாப் ஸ்கோல்ஸ் மற்றும் போலந்து அரச தலைவர் ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் அடுத்தவாரத்தில் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ஒலாப் ஸ்கோல்சும் ரஷ்யா மற்றும் உக்ரையினுக்கு சென்று பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
உக்ரைன் நெருக்கடியில் ஜேர்மனி ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லையென்ற விமர்சனங்கள் உள்ள நிலையில் இந்த நகர்வை ஒலாப் ஸ்கோல்ஸ் எடுக்கவுள்ளார்.