மீண்டும் வெற்றிக்கொடி நாட்டிய உக்ரைன்; வரலாற்றில் பதிவான நாள் - வெள்ளை மாளிகை வெகுவாகப் பாராட்டு!
உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனிலிருந்து ரஷ்ய படையினர் வெளியேறியமை வரலாற்று நாள் என உக்ரைன் அதிபர் வெலடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனிலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளதாக ரஷ்யா அறிவித்ததை தொடர்ந்து உக்ரைனிய படையினரை, அப்பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
முற்றுமுழுதாக கைப்பற்றிய ரஷ்யா
கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்ய படையெடுப்பிற்குப் பின்னர் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட ஒரே பிராந்திய தலைநகரம் கெர்சன். இந்த நிலையில் அங்கிருந்து ரஷ்யா வெளியேறியமை போரின் மிகப்பெரிய பின்னடைவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
குறித்த பகுதியில் இருந்து சுமார் 5,000 இராணுவ உபரணங்கள், ஆயுதங்கள் மற்றும் பிற சொத்துக்கள் அடங்கலாக, 30,000 ரஷ்ய படையினர் அங்கிருந்து வெளியேறியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கெர்சனில் மக்கள், வீதிகளில் உக்ரைனின் தேசியக் கொடியை பறக்கவிட்டதுடன் படையினர் வரும்போது கோஷமிடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
வெள்ளைமாளிகை பாராட்டு
அத்துடன் மக்கள் சிலர் இரவு முழுவதும் தேசபக்தி பாடல்களைப் பாடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வெற்றியை, வெள்ளை மாளிகை அசாதாரண வெற்றி என்று பாராட்டியுள்ளது.
அதே நேரத்தில் உக்ரைனிய அதிபர் இதை வரலாற்று நாள் என்று கூறியுள்ளார்.
எனினும் கம்போடியாவில் நடைபெறும் ஆசிய நாடுகளின் உச்சிமாநாட்டில் உரையாற்றிய உக்ரைனின் வெளியுறவு அமைச்சர், டிமிட்ரோ குலேபா ‘உக்ரைனில் போர் தொடர்வதாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
