நாட்டைக் காப்பாற்றும் முனைப்பில் உக்ரைன் படைகள்- ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை!
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு உக்ரைன் தரப்பிலிருந்தும் கடும் பதிலடி கொடுக்கப்படுகிறது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 5300க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.
நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷ்யாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையில் பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ள நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்ய வீரர்கள் உடனே வெளியேற வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளை ‘உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ எனவும் எச்சரித்துள்ளார். தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிரான போரில் சண்டையிட விரும்பினால் இராணுவ அனுபவம் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் நாட்டை உறுப்பினராக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
ரஷ்ய இராணுவத்தின் 191 பீரங்கிகள், 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளது. இதுதவிர 816 கவச வாகனங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும், ரஷ்ய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் இராணுவம் கூறியுள்ளது.
