மீண்டும் உக்ரைன் ரஷ்ய பேச்சுவார்த்தை!
உக்ரைன்-ரஷ்யாவிடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
உக்ரைன் உள்ளூர் நேரப்படி இன்று 10.30 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை காணொலி மூலம் நடைபெறும் என தலைநகர் கீவ்விலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனை ஜெலன்ஸ்கியின் ஆலோசகரும், உக்ரைன் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்தவருமான மைக்கைலோ பொடோலியாக் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக, புடின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவும் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் இலட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன.
இதுவரை உக்ரைன் - ரஷ்யா உயர் மட்ட தூதுக்குழுக்கள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியிலே முடிவடைந்தன. இதனையடுத்து நேரில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ரஷ்ய அதிபர் புடினுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார். இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது இஸ்ரேல் பிரதமர் நஃபதலி பென்னெட் இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்வதற்கு, ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.
எனினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க தான் விரும்பவில்லை என புடின் தெரிவித்துள்ளார். துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது அவர் இதனைக் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
